Archives: அக்டோபர் 2023

தேவனுடைய செட்டைகளின் நிழலில்

எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள குளத்தில் வாத்து குஞ்சுகளுடன் பல வாத்து குடும்பங்கள் உள்ளன. அந்த சிறிய குஞ்சுகள் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன. நான் நடந்து செல்லும்போது அல்லது குளத்தைச் சுற்றி ஓடும்போது அவைகளைப் பார்க்காமல் இருக்கமுடியாது. ஆனால் நான் கண்ணில் படுவதைத் தவிர்க்கவும், வாத்துக்களுக்கு ஒரு பரந்த இடத்தைக் கொடுக்கவும் கற்றுக்கொண்டேன். இல்லையெனில், அதனுடைய பெற்றோர்கள் அதற்கு நான் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சி என்னை துரத்தும் அபாயம் நேரிடும். 

ஒரு பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் உருவகத்தை வைத்து தேவன் தன்னுடைய பிள்ளைகளை எவ்வளவு மென்மையாய் பாதுகாக்கிறார் என்று வேதம் அறிவிக்கிறது (சங்கீதம் 91:4). சங்கீதம் 61இல், இந்த வகையான தேவனுடைய பராமரிப்பை அனுபவிக்க முடியாமல் தாவீது திணருவதை நாம் பார்க்கக்கூடும். அவர் தேவனை “அடைக்கலம்” மற்றும் “பெலத்த துருகம்” (வச. 3) என்றும் விவரிக்கிறார். அவர் தற்போது “பூமியின் கடையாந்தரத்திலிருந்து” கூப்பிட்டு, “எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2) என்று கெஞ்சுகிறார். அவர் மீண்டும் தேவனுடைய “செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வச. 4) என்று உறுதியாய் அறிவிக்கிறார். 

மேலும் தனது வலியையும், குணமடைவதற்கான ஏக்கத்தையும் தேவனிடம் கொண்டுவந்து, தாவீது தனக்கு தேவன் செவிசாய்த்ததை அறிந்து ஆறுதல் அடைந்தார் (வச. 5). தேவனுடைய உண்மைத்தன்மையின் காரணமாக, அவருடைய “நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” (வச. 8) என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார். 

சங்கீதக்காரனைப் போலவே, நாமும் தேவனுடைய அன்பை விட்டு விலகி தொலைவில் இருப்பதை உணரும்போது, நம்முடைய வலியிலும் கூட, அவர் நம்முடன் இருக்கிறார், ஒரு தாய் பறவை தனது குட்டிகளைக் காப்பது போல் நம்மைப் பாதுகாத்து, பராமரித்து வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் அவருடைய அன்பான கரங்களுக்குள் அடைக்கலம் புகலாம். 

ஸ்மார்ட்போன் இரக்கம்

உங்களுக்கு வாகனத்தில் உணவு கொண்டுவருபவர் தாமதமாக வந்தாரா? அவருக்கு ஒரு நட்சத்திர மதிப்பீட்டை வழங்க உங்களது மொபைலைப் பயன்படுத்தலாம். கடைக்காரர் உன்னிடம் குறும்பாக நடந்து கொண்டாரா? நீங்கள் அவளுக்கு ஒரு விமர்சன மதிப்பாய்வை எழுதலாம். ஸ்மார்ட்போன்கள், ஷாப்பிங் செய்ய, நண்பர்களுடன் பழக, மேலும் பலவற்றைச் செய்ய உதவும் அதே வேளையில், அவை ஒருவருக்கொருவர் மதிப்பிடும் சக்தியையும் கொடுக்கின்றது. மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

ஒருவரையொருவர் இவ்வாறு மதிப்பிடுவது சிலவேளைகளில் சிக்கலாகவும் இருக்கிறது. ஏனெனில் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் மதிப்பீடுகள் வழங்கப்படலாம். ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலை காரணமாக தாமதமாய் உணவுகொண்டுவந்ததற்காக மோசமாக மதிப்பிடப்படுகிறார். தன்னுடைய நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் இரவு முழுவதும் விழித்திருந்ததினால் கடைக்கார பெண் எதிர்மறையான விமர்சனத்தைப் பெறுகிறார். மற்றவர்களை இப்படி அநியாயமாக மதிப்பிடுவதை எப்படி தவிர்க்கலாம்?

தேவனுடைய சுபாவத்தை தத்தெடுப்பதின் மூலம் இதைத் தவிர்க்கக்கூடும். யாத்திராகமம் 34:6-7 இல், தேவன் தன்னை “இரக்கமும், கிருபையும்” உள்ளவராக காண்பிக்கிறார். அதாவது சூழ்நிலை புரியாமல் நம்முடைய தோல்விகளை அவர் நியாயந்தீர்க்கமாட்டார். “நீடிய சாந்தம்” உள்ளவர் - அதாவது, ஒரு தவறு நிகழ்ந்த மாத்திரத்தில் அதை எதிர்மறையாய் மதிப்பிடமாட்டார். “மகா தயையும்” கொண்டவர் - அதாவது அவருடைய சிட்சைகள் நமது நன்மைக்காகவே, பழிவாங்குவதற்காக அல்ல. “பாவத்தையும் மன்னிக்கிறவர்” - அதாவது நமது வாழ்க்கையை நமது ஒரு நட்சத்திர அந்தஸ்தினால் வரையறுக்க வேண்டியதில்லை. தேவனுடைய குணாதிசயமே நம்முடைய அடிப்படையாக இருக்க வேண்டும் (மத்தேயு 6:33). கிறிஸ்துவின் சுபாவத்தை செயல்படுத்துவதின் மூலம் ஸ்மார்ட்ஃபோன்களின் கடுமையான தன்மையைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் யுகத்தில், நாம் அனைவரும் மற்றவர்களை கடுமையாக மதிப்பிடலாம். இன்று ஒரு சிறிய இரக்கத்தைக் கொண்டுவர பரிசுத்த ஆவியானவர் நமக்கு கிருபையளிப்பாராக!

நீங்கள் தேவனை விசுவாசிக்கலாம்

என் பூனை மிக்கிக்கு கண் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தினமும் கண்களில் சொட்டு மருந்து போட்டேன். அதை நான் இருக்கையில் அமர்த்தி அதற்கு சொட்டு மருந்து போட முயற்சிக்கும்போது, அது சரியாய் உட்கார்ந்து, அந்த மருந்தை வாங்கிக்கொள்வதற்காக தன்னுடைய கண்களை திறந்து காண்பிக்கும். “நல்ல பையன்” என்று அதற்கு பாராட்டுக்கொடுப்பேன். நான் என்ன செய்கிறேன் என்பது அதற்கு புரியவில்லை என்றாலும், அது ஒருபோதும் குதிக்கவோ, சீண்டவோ அல்லது என்னைக் கீறவோ முயற்சிக்கவில்லை. மாறாக, அது என்னிடமாய் நெருங்கி வருவதற்கே முயற்சித்தது. அது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. என்னை அதனால் நம்ப முடியும் என்பது அதற்கு நன்றாய் தெரியும். 

தாவீது, சங்கீதம் 9ஐ எழுதியபோது, தேவனின் அன்பையும் உண்மைத்தன்மையையும் அவர் ஏற்கனவே அனுபவித்திருக்கவேண்டும். அவர் தன்னுடைய எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தேவனை நாடுகிறார். தேவனுடைய அவருடைய சார்பில் செயல்படுகிறார் (வச. 3-6). தாவீதின் தேவையின் போது, தேவன் அவரை கைவிடவில்லை. இதன் விளைவாக, தாவீது தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்கிறார். அவர் வல்லமையும் நீதியும், அன்பும் உண்மையும் கொண்டவர். அதனால் தாவீது தேவனை நம்புகிறார். தேவன் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நான் மிக்கியை அதன் சிறுபிராயத்தில் தெருவில் ஒரு பட்டினி கிடக்கும் பூனைக்குட்டியாகக் கண்ட இரவு முதல், பல நோய்கள் தருவாயில் அதை கவனித்துக்கொண்டேன். அதனால்; நான் அவருக்குப் புரியாத விஷயங்களைச் செய்தாலும் கூட, என்னை நம்ப முடியும் என்று அதற்குத் தெரியும். இதேபோல், தேவன் செய்யும் சில காரியங்களை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் அவர் இதுவரை செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரை அணுகுவது நல்லது. வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தேவனையே நம்ப முற்படுவோம்.

பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்ற

நீங்கள் எப்போதாவது ஒரு கண்காட்சி விற்பனையில் குறைந்த விலை பொருட்களை வாங்கி, அது நம்பமுடியாத விலைமதிப்புள்ள ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டா? கனெக்டிகட்டில் நடந்த ஒரு மலர் வடிவம்கொண்ட சீன பழங்கால கிண்ணம் வெறும் 35 டாலருக்கு (சுமார் 2800 ரூபாய்) வாங்கப்பட்டது. அதே கிண்ணம், 2021 ஏலத்தில் 700,000 டாலருக்கு (கிட்டத்தட்ட 6 கோடி இந்திய ரூபாய்) விற்கப்பட்டது. இந்த கிண்ணம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு அரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருளாக மாறியது. சிலர் சிறிய மதிப்புடையதாகக் கருதுவது உண்மையில் பெரிய மதிப்பைக் கொண்டிருக்கும் என்பதற்கு இது ஒரு அற்புதமான உதாரணம். 

உலகம் முழுவதும் பரவியுள்ள விசுவாசிகளுக்கு எழுதும்போது, பேதுரு இயேசுவின் மீதான அவர்களின் நம்பிக்கை எல்லா கலாச்சாரத்தினராலும் நிராகரிக்கப்பட்ட ஒருவர் மீதான நம்பிக்கை என்று விளக்குகிறார். பெரும்பாலான யூத மதத் தலைவர்களால் வெறுக்கப்பட்டு, ரோமானிய அரசாங்கத்தால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றாததால், பலரால் பிரயோஜனமற்றவராகக் கருதப்பட்டார். ஆனால் மற்றவர்கள் இயேசுவின் மதிப்பை நிராகரித்த போதிலும், அவர் “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய” (1 பேதுரு 2:4) மதிப்பு மிக்கவராய் திகழ்ந்தார். நமக்கான அவரது மதிப்பு வெள்ளி அல்லது தங்கத்தை விட விலையேறப்பெற்றது (1:18-19). மேலும், இயேசுவை நம்புவதற்குத் தேர்ந்தெடுக்கும் எவரும் தங்கள் விருப்பத்தைப் பற்றி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள் என்ற உறுதி நமக்கு இருக்கிறது (2:6).

மற்றவர்கள் இயேசுவை மதிப்பற்றவர் என்று நிராகரிக்கும்போது, நாம் வேறுவிதத்தில் பார்ப்போம். கர்த்தருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற பரிசைக் காண நமக்கு உதவுவார். அவர் தேவ குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் மாறுவதற்கான விலைமதிப்பற்ற அழைப்பை எல்லாருக்கும் கொடுக்கிறார் (வச. 10).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

பெஹலே ஆப்

கருணை மற்றும் விருந்தோம்பலின் இந்தியாவின் முடிசூடா தலைநகரம் லக்னோ. பின்வரும் நகைச்சுவையில் இது பொருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது: "ஏன் பயணிகள் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் ரயில் நிலைய நடைபாதையில் ஒருவருக்கொருவர், "பெஹலே ஆப்!" ("நீங்கள் முதலில்" என்று மொழிபெயர்க்கிறது) என்று சொல்லி நகராமல் இருப்பதாலே". மற்றவர்களை முதலில் செல்ல அனுமதிப்பது பற்றி லக்னோ மக்களிடம் இருந்து நாட்டின் பிற பகுதிகள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.

ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவர்களான நமக்கோ தாழ்மைக்கான நமது அளவுகோல் இயேசுவே. இயேசு சொன்னார், "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்" (மத்தேயு 23:11). அண்ட சராசரத்தின் சிருஷ்டிகராகிய அவர், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" (ஏசாயா 53:7) நடத்தப்படுவதற்கு அனுமதித்தபோது, அவர் நமக்குத் தாழ்மையை விளக்கிக் காட்டினார். பவுல் பிலிப்பி சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவின் தலைமையின் அளவை குறித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இயேசு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி இருக்க அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (வ.6-8) என்ற உண்மையை நாம் சிந்தையில் கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். இந்த கீழ்ப்படிதலுள்ள தாழ்மையே அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அவருக்கு உலகின் ஒரே மீட்பராக "மேலான நாமத்தை" வழங்கியது (வ.9-11).

தாழ்மையான இதயம் கொள்வது எளிதல்ல. மற்றவரின் தேவைகளை நம் தேவைக்கு மேல் வைப்பது மிகவும் கடினம். குடும்பம் அல்லது நண்பர்கள் போன்ற நாம் விரும்பும் நபர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் அந்நியர்களின் தேவைகளை நம்முடைய தேவைகளுக்கு மேல் வைப்பது கடினம் (மாற்கு 12:31). உண்மையான தாழ்மையின் தன்மையை இயேசு நமக்குக் காட்டினார். நாம் பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு உதாரணம் கொடுத்தார். தாழ்மையானது கடினமாக இருந்தாலும், நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.